புதன், 23 மே, 2012

கதை நம்பும்படி இருக்க வேண்டாமா?


முந்தானை முடிச்சு தொடரில் மீனாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ப்ரேமா ஒரு சி டி யைத்தேடிப் பிடித்து வாங்கிவர அது காணாமல் போய் ஒருவழியாக அது வீட்டுக்கு வந்து மீனாவின் கையில் கிடைத்துவிடுகிறது. ப்ரேமா சாமர்த்தியமாகப் பேசி மீனாவிடமிருந்து அதை வாங்கி மீனாவின் கண்முன்னாலேயே எரித்துவிடுகிறாளாம். மீனாவின் வருங்காலக் கணவன் “அந்த சிடியை ப்ரேமா எரிக்கவில்லை” என்று சொல்லி ப்ரேமாவின் பீரோவிலிருந்து அதை எடுத்துக் காண்பிக்கிறான். 
இந்த விசயத்தை கந்தசாமியிடம் சொல்ல அவர் ப்ரேமாவை தனியாக அழைத்து “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கேட்க “அந்த சிடி கிடைத்துவிட்டது என்று தானே என்னை விரட்டுகிறீர்கள். அந்த கிடியின் நாலு காபி என்னிடம் இருக்கிறது”  என்று சொல்கிறாள். (அந்த நேரத்துக்குள் அவள் எங்கும் வெளியில் போகாமலே சிடி காபி எப்படி வந்தது??)

மீனாவின் கல்யாணத்தை நிறுத்தாமலிருக்க (சிடியைத்தர) கந்தசாமியின்   சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எழுதித் தரவேண்டுமென்று ப்ரேமா வற்புறுத்துகிறாளாம். ( ஒருவரால் சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எப்படி எழுதித் தர முடியும்?) அந்த நல்லவர் கந்தசாமி அப்படியே எழுதித்தருகிறாராம்!! பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே சென்று பதிவு செய்து தருகிறாராம் அதுவும் எப்படிப் பட்ட நேரத்தில் கல்யாணத்திற்காக எல்லோரும் மண்டபத்திற்கு செல்ல இருக்கும் நேரத்திற்குள். (ஏதாவது நம்பும் படியாக இருக்கிறதா?)

எல்லோரும் கல்யாண மண்டபத்திற்கு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் மீனாவின் வருங்கால மாமியார் அவர்களுடைய சொந்தக் காரர்கள் மீனாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் என்று சொல்லி அவர்களை மீனாவின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வர அங்கு “சொத்துக்கள் முழுவதையும் கூட எழுதித் தருகிறோம்” என்று முத்து சொல்லும் சூழ் நிலை வருகிறதாம்.
 
மீனாவின் நலுங்கு நடந்த பிறகு கல்யாணம் நடப்பதற்கு முன் கந்தசாமியின் நண்பர் (இறந்துபோன) அண்ணாமலைக்கு கந்தசாமியின் மகன்களும் மருமகள்களும்  குளக்கரையில் காரியம் செய்கிறார்களாம். தொடர் பார்ப்பவர்களின் அனுதாபத்தைப் பெற / ஆர்வத்தைத் தூண்ட எப்படி வேண்டு மானாலும் திரைக்கதையை அமைக்கலாமா? நம்பும்படி இருக்க வேண்டாமா?? எல்லாமே நல்ல வேடிக்கைதான்

செவ்வாய், 22 மே, 2012

தொடர் தயாரிப்பாளர்கள். மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??


முந்தானை முடிச்சு தொடரில் மீனா ஒருவனை காதலித்து கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிடுகிறாள். திருமதி செல்வம் தொடரில் கதாநாயகி அர்ச்சனாவின் தங்கை ப்ரியா கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கதையை அமைத்திருந்தார்கள்.

‘’செல்லமே’ தொடரில் ஒரு பெண்ணை நான்கு பேர் கெடுத்துவிட அவள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானதாகவும் அவர்களுள் கர்ப்பத்திற்குக் காரணமானவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.என்றும் கதை தொடர்ந்தது.

உதிரிப்பூக்கள் தொடரில் திருமணமான தெட்சிணாமூர்த்தி இன்னொருத்தி யுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்று குடும்பம் நடத்துவதாகக் கதையை அமைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் போதாதென்று சமீபத்தில் துவங்கிய ‘பிள்ளை நிலா’’ தொடரிலும் கோகிலா காதலித்து கல்யாணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி இருப்பதாகக் கதையைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஆக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாதி தொடர்களில் இப்படி கல்யாணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாகிவிடுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்களே தொடர் தயாரிப்பாளர்கள். இவர்கள் மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??