புதன், 15 பிப்ரவரி, 2012

நல்லவன் குடிக்கமாட்டான்; அப்படி குடிப்பவன் நல்லவனாக மாட்டான்

“திருமதி செல்வம்” தொடரில் செல்வம் கதாபாத்திரத்தை மிக நல்லவராக உருவாக்கிவிட்டு அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்க ஆரம்பித்து பின் மொடா குடியனாக ஆகிவிட்டதாகவும், குடிகாரர்கள் செய்யும் எல்லா அட்டகாசங்களையும் செல்வம் செய்வதாகவும் காட்டி வருகிறார்கள். இது ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இல்லை.

ஒரு நல்லவன் எத்தனை முறை எத்தனை பேரால் கட்டாயாப் படுத்தப் பட்டாலும்கூட அவன் குடிக்கமாட்டான். அப்படியே குடித்தால்கூட அடாவடித்தனமாக நடக்கமாட்டான் இது நிச்சயம். இப்படியெல்லாம் நடப்பவனை நல்லவன் என்று எப்படிச் சொல்லமுடியும்.

உங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டவேண்டும், எதிர்பாராத திருப்பங்கள் வர வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகக் காட்டுவதா? நல்லவனே குடிப்பதாகக் காட்டுவதால் இன்னும் சிலபேர் குடிகாரர்களாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

பகல் நேரத்தில் ஒளிபரப்பான திருமதி செல்வம் அதன் கதை அமைப்பு நன்றாக இருந்ததால் இரவு நேர ஒளிபரப்பாக மாற்றப்பட்டது. செல்வத்தின் தம்பி, செல்வத்தின் அப்பா குடிகாரர்கள்தான்; அவர்கள் நல்லவர்களாகக் கட்டப்படவில்லை. செல்வம் நல்லவன், யாருக்கும் கெடுதல் செய்யாதவன், எல்லோருக்கும் நல்லதே செய்பவன், பல கஷ்டங்களுக்கிடையே முன்னேறி வருபவன் இப்படி மாறியதாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளவே முடியாது.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதா?

“திருமதி செல்வம்” தொலைக் காட்சித் தொடரில் வரும் கதாநாயகன் செல்வம் மிகவும் நல்லவன், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன், எந்தச்சூழ்நிலையிலும் சரியாகவே பேசுவான் சரியானதையே செய்வான் என அவனது பாத்திரத்தை படைத்து ஆரம்பத்திலிருந்தே அவனது செயல்களை நல்லவிதமாகவே காண்பித்து வந்தார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட செல்வம் தன் தொழில் ரீதியாக மது அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறான் அதனால் குடிபோதையில் சுய நினைவில்லாமல் வீட்டுக்குவருகிறான் என்று கண்பித்தார்கள். அடுத்ததாக அவனது புது நண்பரான சேட் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்து அதனால் அவன் வீட்டுக்கு வெளியே குடிபோதையில் புல்தரையில் விழுந்து கிடந்ததாகக் காட்டினார்கள்.

இப்போதோ அவனது தங்கை ராணி கணவனின் நிபந்தனையை ஏற்று செல்வத்தை வேண்டாமென சொல்லிவிட்டு கணவனுடன் வாழப் போகிறேன் என்று சொல்லவே மனம் வருந்தி தன் சோகத்தை மறப்பதற்காகக் குடிக்கிறான் என்று சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே புல் தரையில் விழுந்து கிடப்பதாககக் கதை போகிறது.

நல்ல குணாதிசையம் உள்ளவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் முதல் முறை குடிப்பதைத் தவிர்க்க முடியாதவனாக இருந்திருக்கலாம். இரண்டாவது முறை கூல்ட்ரிங்கில் கலந்து கொடுத்த போது அந்த நல்லவன் ஒரு கிளாஸோடு நிறுத்தியிருக்கலாமே.

எப்போதும் நல்லதையே செய்யும் செல்வம் தங்கை தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாளே என்று வருந்துபவன், குடிக்கத்தான் போக வேண்டுமா? அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே! சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா? விகடன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!